வெகுசில பாதுகாப்பு அதிகாரிகளுடன் தங்களோடு பேச்சுவார்த்தை நடத்த நேரில் வந்த அதிபர்யை ஆயுதம் தாங்கிய 800 காவல்துறையினர் சூழ்ந்து கொண்டார்கள். முதலில் பாதுகாவலர்களை தாக்கினார்கள். மூட்டு அறுவை சிகிச்சை செய்திருந்ததால் ஓட முடியாமல் தனது கைத்தடியை ஊன்றி வேகமாக நடந்து தப்பிக்க முயன்ற ஜனாதிபதியை, அவரது கால் மூட்டிலேயே அடித்தார்கள். சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் அவரை உடனடியாக அங்கிருந்து தப்பச் செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கும் நூற்றுக்கணக்கான போலீசார் சூழ்ந்து கொண்டார்கள். அவரைக் கொல்ல முயற்சித்தார்கள். தகவல் அறிந்தும் உடனடியாக ஜனாதிபதியை காப்பாற்ற முயற்சி எடுக்காத ராணுவம், நீண்ட நேரம் கழித்து அதிரடி படையை அனுப்பி, கலகம் செய்த போலீஸ்காரர்களிடமிருந்து 14 மணிநேரம் கழித்து ஜனாதிபதியை காப்பாற்றியது.
பரபரப்பான சினிமாக் கதைபோல நடந்த இந்த சம்பவம் தற்செயலான நிகழ்வல்ல. தனது கட்டளைக்கு பணிய மறுத்த ஈக்வடார் தேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ரஃபேல் கோரியா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்ட கொடிய தாக்குதல் இது; காவல்துறைக்குள்ளும் ராணுவத்திற்குள்ளும் இருக்கும் தனது கைக்கூலிகளால் திட்டமிட்டு, ஜனாதிபதியை படுகொலை செய்ய நடத்தப்பட்ட கலக முயற்சி இது. ஆனால் தகவலறிந்த சில மணி நேரங்களில் ஈக்வடார் தேசமே கொந்தளித்தது. ஜனாதிபதிக்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர். அவர் சிறை வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில், ஆயுதமேந்திய போலீசாரையும் மீறி உள்ளே நுழைந்தனர். சில இடங்களில் மக்களுக்கும் போலீசாரின் ஒரு பகுதியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பதட்டமும் பரபரப்பும் ஈக்வடாரில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவே கொந்தளித்தது. வெனிசுலாவும், கியூபாவும், பொலிவியாவும் கோரியாவுக்கு ஆதரவாக குரல்எழுப்பின. சொந்த நாட்டு மக்களும், அண்டை நாட்டு அரசுகளும் எழுப்பிய உறுதிமிக்க ஆதரவுக்குரலால், கோரியா அரசுக்கு எதிரான கலகம் தோற்கடிக்கப்பட்டது.