என்னுடைய உரையை மார்க்சியம் பற்றி அம்பேத்கர் என்றும், அம்பேத்கர் பற்றி மார்க்சியம் என்றும் இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கிறேன். முதல் விஷயத்தைப் பொறுத்தவரை மார்க்சியம் பற்றிய தனது கருத்துக்களை அம்பேத்கர் ஆங்காங்கே பேசியிருந்தாலும் “புத்தரா? கார்ல் மார்க்சா?” எனும் நெடுங்கட்டுரையில் இதுபற்றி விரிவாகவே அலசியிருக்கிறார்.
மார்க்சியத்தில் இப்போதும் காலப்பொருத்தம் உள்ளவையாக இருப்பவை என்று அவர் நான்கு கூறுகளைக் குறிப்பிட்டுள்ளார். ஒன்று - இதுவரை தத்துவஞானிகள் எல்லாம் உலகு பற்றிய பல்வேறு வியாக்யானங்களைத் தந்துள்ளார்கள், செய்ய வேண்டியது என்னவோ உலகை மாற்றுவதுதான். இரண்டு - ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் இடையே அவற்றின் நலன்களில் முரண்பாடு உள்ளது. அதாவது, வர்க்கப் போராட்டம் நடக்கிறது. மூன்று - தனியுடைமை யின் காரணமாக ஒரு வர்க்கத்துக்கு அதிகாரமும், இன்னொரு வர்க்கத்துக்கு சுரண்டலினால் வரும் துன்பமும் ஏற்படுகின்றன. நான்கு - சமுதாயத்தின் நன்மைக்காக தனியுடைமையை ஒழிப்பதன் மூலம் துன்பத்தை நீக்குவது அவசியம்.